சென்னை :'முழு ஊரடங்கு உத்தரவை மீறுவோர்கள் மீது, இன்று முதல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி.,திரிபாதி எச்சரித்துள்ளார்.
நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொடிய கொரோனா நோயை கட்டுப்படுத்த, தமிழகத்தில், மே, 10ல் இருந்து, முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது.இதையொட்டி, அனைத்து இடங்களிலும், காவல் துறை சார்பில், ஒலி பெருக்கி வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், 'முக கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்' என, அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அறிவுரைகளை சிலர் சரியாகவும், ஒழுங்காகவும் பின்பற்றாததால், கொடிய தொற்று மேலும் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது.
அதனால், இன்று முதல், முழு ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடமாடுவோர் மீது, தகுந்த சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, எச்சரிக்கப்படுகிறது.சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருந்து, பொது மக்கள் தங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, திரிபாதி கூறியுள்ளார்.